Saturday 31 May 2008

நினைவு நிகழ்வு

மனித கௌரவத்திற்கான மன்றத்தின் இயக்குனரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆலோசகரும் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின்
நினைவு நிகழ்வு

இடம்: கொன்வே மண்டபம், ரெட் லயன் சதுக்கம், லண்டன்
காலம்: ஞாயிறு, 13 யூலை 2008.
நேரம்: பிற்பகல் 12.30 மணியிலிருந்து மாலை 4.30 மணி வரை
இலங்கையிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் பல சமூக சமய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கலந்து சிறப்பிப்பார்கள்.
அனைவரும் வருக !
மேலதிக விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்
அழைப்பாளர்கள்:
மகேஸ்வரி வேலாயுதம் நினைவுக் குழு, லண்டன்

Wednesday 21 May 2008

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பகிரங்க வேண்டுகோள்!

- தமிழ் சமாதான ஓன்றியம்

தமிழ் பேசும் மக்கள் தமது பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு கிழக்கு மாகாணங்களில் சமஷ்டி ரீதியிலான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வது எமது உரிமைப் போராட்டத்தில் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான தீர்வாகும். சமஷ்டி முறையிலான தீர்வினை ஏற்றுக் கொள்வது எவ்வகையிலும் தமிழ் மக்களுக்கு தீங்கிழைப்பதல்ல. அத்தகைய தீர்வினை அடைவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய அளவில் உதவ முடியும். எனவே சமஷ்டி முறையிலான தீர்வினை விரைவில் சாத்தியமாக்கவும் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம விரைவில் சுபீட்சம் அடைவதற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காத்திரமான பங்களிப்பினைக் கோரும் இவ் வேண்டுகோளை சமாதானத்தை விரும்பும் மக்கள் சார்பாக முன் வைக்கிறோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளை எற்று தமிழ் பேசும் மக்கள் செய்த அர்ப்பணிப்புக்களை தியாகங்களை மனதில் கொண்டு செயல்படுவீர்கள் என்று நம்புகிறோம். தமிழ் பேசும் மக்களின் வாழ்வை உத்தரவாதம் செய்யும் இவ்வேண்டுகோளை அக்கறையுடன் பரிசீலிக்குமாறு நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்ற கோஷத்தை முன்வைத்து பாரிய அர்ப்பணிப்புக்களை செய்யும்படி கேட்டுக் கொண்டீர்கள் என்பதால் சமஷ்டி முறையிலான தீர்வை ஏற்றுக் கொள்வது எவ்வகையிலும் அவர்களின் தியாகங்களை அர்தமில்லாததாக மாற்றிவிடாது. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் செய்யப்பட்ட அனைத்து அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் தமிழ்மக்களின் உரிமையை பெற்றுக் கொடுத்தனவாக அமையும். தமிழ் பேசும் மக்கள் தமது உரிமைகளைப் பெற்று கௌரவுத்துடன் சமத்துவமாகவும் சமாதானமாகவும் வாழ்வதை உறுதி செய்வதே இலட்சியமாக இருப்பின் அதனை உறுதி செய்யும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை நடைமுறையாக்க உதவுவது எப்படித் தவறாக முடியும்? பாலஸ்தீன விடுதலை இயக்கம் முன்னர் இஸ்ரேலின் இருப்பை நிராகரித்து சபதம் செய்து இன்று அதனை அங்கீகரித்து வாழ முற்படுவதால் பாலஸ்தீன மக்களின் நலனுக்கு குந்தகமாக செயல்பட்டவர்களாக மாட்டார்கள்.

சிங்கள பௌத்த பேரினவாத சத்திகள் தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான உரிமை கிடைப்பதற்கு எதிராக செயல்படுவார்கள் என்பதில் ஜயமில்லை. பெரும்பான்மை இனமக்களிடையே உள்ள தமிழர்களுக்கு நியாயமான உரிமை கிடைக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளும் ஜனநாயக சத்திகளை வலிமைப்படுத்துவதன் மூலமே அவர்களைப் பலவீனப்படுத்த முடியும். இன்று தென்னிலங்கையில் பேரினவாத சத்திகள் சிறிய தொகையினராகவே உள்ளனர். அப்படியிருந்தும் அவர்கள் எதிர்ப்புகளையும் மீறி தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான உரிமை கிடைப்பதற்கு பாரிய இழப்புகளையும் துயரங்களையும் அடைய வேண்டியுள்ளது. இனிவரும்காலங்களில் பேரினவாத சத்திகள் பெரும்பான்மை அரச அதிகாரம் கொண்டவர்களாக மாறினால் தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெறுவது மேலும் கடினமானதாகும். எனவே இன்றுள்ள சூழ்நிலைகளை சாதகமானவையாகக் கருதி தமிழ்பேசும் மக்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்கும் சமஷ்டி முறையிலான தீர்வினைப் பெற முயல்வது அவசியமானதும் அவசரமானதும் ஆகும்.

இப்பொழுதும் சமஷ்டி முறையிலான தீர்வு ஏற்படுவது மிகவும் சாத்தியமானதே. இதனை தமிழீழ விடுதலைப் புலிகளின் காத்திரமான பங்களிப்பு மட்டுமே விரைவில் நடைமுறைப்படுத்த முடியம். சமஷ்டி முறையிலான தீர்வை ஏற்றுக் கொள்ளும் தெளிவான மனப்பூர்வமான பகிரங்கமான அறிக்கையினை வெளியிடுவதன் மூலம் அவர்களால் இதற்கான பாதையை திறந்துவிட முடியும். சமஷ்டி முறையிலான தீர்வு முன்வைக்கப்படுமாக இருந்தால் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவர பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக சிங்கள மக்களுக்கு பகிரங்கமாக தெளிவாக தெரிவிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் இத்தகைய துணிச்சல் மிக்க நடவடிக்கை தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாக துரிதப்படுத்தும். போரினை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து மக்கள் அழிவை அவலங்களை தடுக்க உதவும். நல்லெண்ணம் கொண்ட மக்களுக்கு உந்து சக்தியாக அமையும்.

தமிழ் பேசும் மக்கள் மேலும் மேலும் படுகொலை செய்யப்படுவதை நிறுத்தவும் இதுவரை கால தியாகங்களும் அர்ப்பணிப்புகளும் வீண் போகாமல் இருக்கவும் தமிழீழ விடுதலைப் புலிகள் துணிவுடன் இத்தகைய அறிக்கையை வெளிவிட வேண்டுமென்று சமாதானத்தை விரும்பும் மக்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர். சமஷ்டி முறையிலான தீர்வை முன்வைப்பின் ஆயுத போராட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் முடிவுக்கு கொண்டு வர பூரண ஆதரவு அளிப்போம் என்ற அறிவிப்பு சாதிக்கக் கூடிய மாற்றங்கள் எதனையும் எத்தகைய ஆயுத நடவடிக்கையும் சாதிக்க முடியாது. இலங்கை அரச படையினரால் தமிழ்பேசும் மக்கள் மேலும் துன்புறுத்தப் படுவதையே ஏனைய நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நீடிக்கும்.

உங்கள் பங்களிப்பு முழுமையாக இருக்கும் பொழுது தமிழ் பேசும் மக்கள் தமது உரிமைகளை அனுபவிக்கக் கூடிய அதிகபட்ச அதிகார பரவலாக்கத்தை பெற்றுக் கொள்ளமுடியும என்ற உண்மையை அணைவரும் ஏற்றுக்கொள்வர்;. இதன் மூலம் தென்னிலங்கை இனவாத சத்திகளை மிகவும் பலவீனப்படுத்தப்படுவர். இது யுத்த நிறுத்தம் ஏற்படுவதை உத்தரவாதப் படுத்தும்.

தமிழ் அரசியல் கட்சிகள் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படாமையே தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெறத் தவறியமைக்கான காரணமென தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் குறிப்பிட்டுள்ளதனையும் கவனத்திற் கொண்டு செயல்படின் நியாயமான தீர்வினை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும்.

சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான கட்சிகள் சமஷ்டி ரீதியான தீர்விற்கு சாதகமான கருத்துக்களையே கொண்டுள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் சிங்கள மக்கள் அவர்களை அதனை வற்புறுத்தும் வகையிலும் அமையக் கூடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்களிப்பு அனைத்து உலக நாடுகளாலும் இந்திய அரசியல் தலைவர்களாலும் பல்வேறு அரசியல் நிபுணர்களாலும் பெரிதும் வரவேற்க்கப்படும். இவர்களும் அதற்கான ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்க முடியும். இலங்கை அரசிற்கு மேலதிக அழுத்தங்களைக் கொடுக்க முடியும். எனவே சமஷ்டி அடிப்படையிலான திர்வினை ஏற்று ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பூரண ஆதரவு வழங்குவதாக மனப்பூர்வமான அறிக்கையினை தமிழீழ விடுதலைப் புலிகள் துணிவுடன் காலம் தாழ்த்தாது வெளிவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். சமஷ்டி ரீதியான தீர்வினை விரைவில் நடைமுறைச் சாத்தியமாக்கும் வல்லமை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உண்டு. சமாதானத்தை விரும்பும் தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பான இக்கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறோம்.

சமஷ்டி ரீதியான நியாயமான அதிகார பகிர்வினை எமது பாரம்பரிய பிரதேசங்களில் ஏற்படுத்துவதை ஏற்றுக் கொள்வது எவ்வையிலும் சரியானதே. அதன் மூலம் தென்னிலங்கை எங்கும் பரந்து வாழும் மலையக மக்கள் முஸ்லிம் மக்கள் ஏனைய தமிழ் பேசும் மக்கள் அனைவரும் பெரும்பான்மை இன மக்களுடன் சமாதானமாக வாழ்வதற்கான பாரிய கடமையினையும் சரிவர புரிந்தவர்களாவோம். இலங்கையில் சமூக அமைப்புகளின் தன்மை மக்களின் பரவலாக்கம் வரலாறு என்பன சமஷ்டி ரீதியான தீர்வை வலியுறுத்துவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் பின் நிற்க்கக் கூடாது என்பதை தெளிவுறுத்தும். எமது இதுவரை கால அரசியல் போராட்டமும் இதனையே வலியுறுத்தி வந்துள்ளது.

இவர்கள் யார் எமக்கு அறிவுரை கூறுவதற்கு? இவர்களுக்கத் தான் எல்லாம் விளங்கும் போலும்! ஏமக்கத் தெரியாதா என்ன செய்ய வேண்டுமென்று? இவர்கள் சொல்லி நாம் ஏன் செய்ய வேண்டும்? நாம் எத்தனை ஆயிரம் உயிர்களை பறிகொடுத்திருக்கிறோம் எமக்குச் என்ன செய்ய வேண்டுமென்பதைச் சொல்ல இவர்களுக்கு என்ன உரிமை? சமஷ்டி தான் வேன்டுமென்றால் நாம் எப்பொழுதோ எடுத்திருக்க முடியும் போன்ற பல கேள்விகள் உங்கள் மத்தியில் எழ நியாயமுண்டு. இன்றைய சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டு பல்லாயிரம் தமிழ் மக்களைக் காப்பாற்றக் கூடிய இத்தகைய அறிக்கையின் உடனடி அவசியத் தன்மை கருதி எமது கோரிக்கையை பரிசீலிப்பதை நிராகரிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையிலேயே இதனை முன்வைக்கிறோம்.

சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை ஏற்படுத்தக் கூடிய இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி விரைவில் சமாதான சூழ்நிலைகளை தோற்றுவிக்க தமிழீழ விடுதலைப் புலிகளால் முடியும். தமிழ் பேசும் மக்கள் தமது உரிமைகளைக் பெறவும் சமாதானமும் போருக்கு முடிவும் ஏற்படுத்தவும் உங்கள் ஆக்க பூர்வமான பங்பளிப்பை வழங்குவீர்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம். மிகவிரைவாக முன்னேறிக் கொண்டிருக்கும் அண்டைய தமிழ் நாட்டு மக்களைப் போல் எமது மக்களும் முன்னேற துயரங்களிலும் அழிவகளிலும் இருந்கு விடுபட ஆவன செய்வீர்கள் என நம்புகிறோம். இதற்கு சார்பாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் மிகவும் துணிகரமான நடவடிக்கைகளாகவே கருதப்படும். சமஷ்டி ரீதியான தீர்வின் மூலம் விரைவில் ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதை ஆதரித்து தெளிவான பகிரங்க அறிக்கையினை விடுமாறு கேட்டுக் கொள்கிறோம். தமிழ் பேசும் மக்களின் அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் அர்த்தமுள்ளவையாக அவர்களின் எதிர்காலம் விரைவில் நம்பிக்கையுள்ளதாக சுபீட்சமானதாக மாற எமது கோரிக்கையை அக்கறையுடன் பரிசீலிக்குமாறு மறுபடியும் கேட்டுக் கொள்கிறோம்.

21/05/2008

Tamil Forum for Peace (TFP)
27 Old Gloucester Street
LONDON WC1N 3XX
United Kingdom

tamilforumforpeace@gmail.com

Saturday 17 May 2008

செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களுக்கு எமது அஞ்சலி

- தமிழ் சமாதான ஒன்றியம்
உயிர்க் கொலைகளாலும் வன்முறையாலும் எமது மக்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு கண்டு விடமுடியாது. கடந்த மூன்று சகாப்தத்திற்கு மேலாக உச்சமடைந்துள்ள ஆயுத கலாச்சாரமும் அழிவு அரசியலும் எமது மக்களின் வாழ்வை பல்வேறு தளங்களிலும் பல்வேறு பரிமாணங்களிலும் பின்னடைய வைத்துள்ளது. கடந்த கால, நிகழ் கால சமூக விளைவாக தீங்கு நிறைந்து நிற்கும் இந்த அழிவு அரசியல் வழிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றி எமது மக்களின் குறைந்தபட்ச நம்பிக்கையான வாழ்வையும் சூறையாட தொடர்ந்தும் படுகொலைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டவிழ்த்து விடுவதை நமது மக்களின் உண்மையான நலனில் நின்று கண்டிக்க வேண்டி உள்ளதுடன் இச்செயல்பாடுகளை நிறுத்துவதற்கு எம்மாலான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தமிழ் சமூகத்திற்குள் தோன்றிய சகோதர படுகொலைகள் நமது மக்களின் உண்மையான விடுதலையையும் ஜக்கியத்தையும் வெற்றியையும் பெரிதும் பாதித்து சிதைத்து அடிப்படை வசதிகளைக்கூட நிறைவு செய்ய முடியாமல் அல்லல் படும் சமூகமாக கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. தமிழர் தாயகமெங்கும் கைம்பெண்களையும் அனாதைகளையுமே விளைவுகளாக்கியுள்ளது.

தமிழ் மக்களுக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் பாரபட்சமின்றி புரிந்த செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களும் இந்த அழிவு அரசியலின் கோரப்பசிக்கு இரையாகி உள்ளமை கொடூரமான செயலாகும். தமிழ் சமூகத்திற்குள் சமூக சிந்தனையும் சுய ஆளுமையும் கொண்ட ஒரு சில பெண்களில் மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டுமென்ற உந்துதலால் பொது வாழ்வுக்குள் காலடி வைத்தவர். மூன்று தசாப்த காலமாக மக்களின் துயர் தீர்க்கும் வாழ்வில் தம்மை அர்பணித்து வாழ்ந்தவர்.

தொடரும் யுத்தத்தைக் காரணம் காட்டி மக்களின் நாளாந்த பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்க முடியாது என்பதை முதனிலைப்படுத்தி மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டிய பணியால் பல்வேறு அரசியல் சத்திகளுடனும் சமூக நிறுவனங்களுடனும் இணைந்து அவர் ஆற்றிய பங்களிப்புகள் மதிக்கத்தக்கவை, மக்களால் நினைவு கூரத்தக்கவை.

துப்பாக்கிகளின் பாசிச அரசியலுக்கு அஞ்சாது துணிகரமாக செயலாற்றிய சமூகப்பற்றுள்ள மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதானது தமிழ் தேசியத்தின் வழிதவறிய அரசியலின் கோர முகத்தின் அடையாளமாக உள்ளது.

தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பினை ஏற்படுத்திய இப்படுகொலைக்குக் காரணமானவர்கள் தமிழ் மக்கள் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்களா? இதனைப் புரிந்தவர்கள் நமது சமூகத்தின் அவல நிலையை அலட்சியம் செய்து தமது காழ்ப்பு உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் கொலைவெறியினை அரங்கேற்றுவதையே வீரமாக விடுதலையாக விளம்பரப்படுத்துகிறார்கள். தமிழ் மக்களுக்கு தம்மால் இயன்ற அனைத்தையும் செய்யும் அனைவரையும் கொலை செய்வதை விடுதலையின் தாகம் என்றால் சுடுகாடு மட்டுமே மிஞ்சும். இதே வழிமுறை இன்னும் தொடருமாயின் அனைத்து தமிழ் மக்களையும் விடுதலையின் தாகம் விழுங்கி மயான பூமியே மிச்சும்.

ஏன்றாவது ஒருநாள் எங்களின் ஒருவனது துப்பாக்கியே என்னை அமைதியாக்கிவிடும் என்று கூறியபடி துணிவுடன் நமது சமூகத்தின் அவலத்தை ஆவணப்படுத்திய மருத்துவத்துறை பேராசிரியை ராஜினி திரணகம அவர்களை பலியெடுத்த துப்பாக்கிகளே இப்போது மகேஸ்வரி வேலாயுதம் அவர்களையும் பலியெடுத்துள்ளது. அவரது உன்னத பணிக்கு அவரது உயிரைப் பறித்தெடுத்தமை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. தமிழ் மக்களுக்கு தன்னால் இயன்ற மட்டும் சேவை செய்த மகேஸ்வரி வேலாயுதம் அவர்களுக்கு தமிழ் சமாதான ஒன்றியம் சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது. அவர்களின் பிரிவால், வார்த்தைகளால் ஆறுதல் சொல்ல முடியாத சொல்லொணா துயரத்தில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தமிழ் சமாதான ஒன்றியம் தனது அனுதாபங்களைத் தெரிவிக்கிறது.

மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் மக்களை நேசித்ததாலும் மக்களுக்காக அயராது பணி செய்ததாலுமே படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழ் சமாதான ஒன்றியம் அவரது படுகொலையை வன்மையாக கண்டிக்கிறது. இந்த அவலமிகு அழிவை தடுத்து நிறுத்தும் தார்மீக கடமையும் உடனடிப் பொறுப்பும் நமது மக்களின் இயல்பு வாழ்க்கையை நேசிக்கும் அனைத்து சமூக சத்திகளுக்கும் உள்ளது. இப்படுகொலைக்கு காரணமான மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிக்காத அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைப்பதற்கான சமூக, அரசியல் வேலைத் திட்டத்தினை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து உடனடியாக மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கிறது. தொடரும் யுத்தமும் தொடரும் படுகொலைகளும் நமது மக்களை மயானத்திற்கு அழைத்துச் செல்வதை தடுத்து நிறுத்த அனைத்து ஜனநாயக சத்திகளையும் தமக்கிடையிலான வேறுபாடுகளை முதன்மைப்படுத்தாது பொதுவான வேலைத்திட்டமொன்றில் செயல்பட விளையுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதற்கான விட்டுக் கொடுப்புகளுக்கு மனத்திடம் கொள்வதே மகேஸ்வரி வேலாயுதம் அவர்களுக்கு நம்முடைய உண்மையான நன்றி கூறலும் இறுதி அஞ்சலியும் ஆகும். மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் அர்ப்பணிப்பும் பங்களிப்பும் வீண்போகக் கூடாதென்ற உறுதியுடன் புதிய பாதையினை செப்பனிட்டு செயல்பட ஊக்கம் அளிக்கும்படி அனைத்துத் தமிழ் சமூக, அரசியல் அமைப்புகளிடமும் பொது மக்களிடமும் தமிழ் சமாதான ஒன்றியம் ஆதரவு கோருகிறது.
17/05/2008

Tamil Forum for Peace (TFP)
27 Old Gloucester Street
LONDON WC1N 3XX
United Kingdom
tamilforumforpeace@gmail.com

Saturday 3 May 2008

எதிர் வரும் மாகாணசபைத்தேர்தலில் ஜனநாயகத்தைப் பேணுவோம்! தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்துவோம்!!

எதிர்வரும் மே மாதம் 10ம் திகதி கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தல் தொடர்பாக கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் மக்கள் தமது ஆழ்ந்த அக்கறையையும் தெளிவான நிலைப்பாட்டையும் எடுக்க வேண்டியுள்ளது.

ஏனெனில் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணச்சபைத்தேர்தல் கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் மக்களின் எதிர்கால வாழ்வுடன் தொடர்பு உற்று இருப்பதாலும் வேறு எந்தத்தேர்தலிலும் இல்லாத சமூக அரசியல் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாலும் இத்தேர்தல் தமிழ் முஸ்லிம் மக்களைப் பொறுத்த வரை முக்கியமானதாக உள்ளது. கிழக்கு மாகாணத்தேர்தல் அங்கு வாழ்கின்ற பல்லினங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும் அவர்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டவும் சமாதானத்தையும் இயல்பு வாழ்வையும் தோற்றுவிக்கும் தேர்தலாக இத் தேர்தல் அமையவேண்டும்.

ஆனால் இத்தேர்தல் பிரச்சாரங்களில் வெளியிடப்படும் கருத்துக்களும், பிரச்சார உத்திகளும் இனங்கள் மத்தியில் பிளவுகளையும், விரிசல்களையுமே பெறுபேறாகத் தரும் நிலைமைகளே காணப்படுகின்றன. சில வாரங்களுக்கு முன் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல்கள் அங்கு ஓர் ஜனநாயக இடைவெளியை உருவாக்குவதற்கான புறச் சூழலைத் தந்தது என்பது ஏதோ உண்மைதான். புலிகளின் கொடிய வன்முறைகளிலிருந்து மக்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கான அவகாசம் கிடைத்திருப்பதும் முன்னிருந்ததை விட முன்னேற்றகரமானதுதான். ஆனால் கிடைக்கப்பெற்ற இந்த ஜனநாயக இடைவெளியை நிரப்ப முயற்சிக்கும் அரசியல் சக்திகள் குறித்தே எமது கவனங்கள் திரும்பவேண்டும்.

ஆயுதங்கள் இன்னமும் மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதாக மக்கள் அச்சம் கொண்டுள்ளார்கள். ஜனநாயக நீரோட்டத்தில் கலந்துள்ளதாகக் கூறி தேர்தலில் ஈடுபட்டுள்ள சில கட்சிகள் இன்னமும் மக்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது. கடந்த கால அனுபவங்களிலிருந்து மக்கள் இன்னமும் விடுபடவில்லை. கிழக்கு மாகாணம் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்படவேண்டும் என்ற விருப்புடனும் கூட அப் பிரதேசம் சட்ட விரோத ஆயுதங்களின் இருப்பிடமாக இருக்கக்கூடாது என்பதும் மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

மூன்று இன மக்களும் இணைந்து வாழும் அப் பிரதேசம் ஜனநாயகத்தின் மாதிரியாக அமைதல் வேண்டும். ஆனால் தற்போது இடம்பெற்று வரும் பிரச்சாரங்கள் முதலமைச்சர் முஸ்லிமா தமிழரா ஏன்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக மாற்றப்படும் அபாயம் காணப்படுகிறது. இனங்கள் மத்தியிலே பிளவுகளை மேலும் கூர்மைப்படுத்துவதற்கு இனவாத சக்திகள் திட்டமிட்டுச் செயற்பட்டுவரும் இக் காலகட்டத்தில் இச் சூழ்ச்சிகளுக்கு மக்கள் இரையாகாமல் தடுக்கப்பட வேண்டும்.

புலிப்பாஸிஸ இயக்கத்திற்குள் எழுந்த உள் அதிகாரப் போட்டியை பாவித்து பிரபாகரன் அணியை கிழக்கின் ஆதிக்கத்திலிருந்து தனக்கு சாதகமாக பலவீனமடையச்செய்தது அரசாங்கம். ஆனால் கிழக்கு மக்களுக்கு அடிப்படை உரிமைகளையும் ஜனநாயக சூழலையும் வழங்காது இராணுவ பகைப்புலத்தை வைத்துக்கொண்டு கிழக்கு மக்களுக்கு நம்பிக்கையான எந்தவித சமிக்ஞையையும் ஏற்படுத்தாது சூட்டோடு சூடாக கிழக்கு மாகாணச்சபைத் தேர்தலை நடாத்த முன்வந்திருப்பது நம்பிக்கையளிப்பதாக இல்லை என்பதை மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளனர். இருந்தும் ஏற்கெனவே இருந்த நிலமைகளை விட தேர்தல் நடந்து நிலைமைகள் மாறி அடுத்த கட்டத்துக்கு செல்ல ஒரு புதிய சூழல் வரக்கூடும் என்ற நம்பிக்கையில் கிழக்கிலங்கை மக்கள் வாழ வேண்டியுள்ளது.

கிழக்கில் பல்வேறு பிரதேசங்களில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களிடம் இத்தேர்தல் தொடர்பாக கருத்தறிந்தபோது அவர்களது மனஉணர்வுகளிலிருந்து வெளிப்படுகின்ற கருத்துகள் மிகப் பாதகமான சமூக அரசியல் விளைவுகளை நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தோற்றுவிக்க காலாக இத்தேர்தல் அமைந்து விடுமோ என்ற அவர்களின் அச்சத்தையே குறிகாட்டி நிற்கின்றன. தேசிய இனப்பிரச்சினை உக்கிரம் அடைந்த காலத்திலிருந்து கிழக்கு வாழ் மக்கள் வார்த்தைகளில் சொல்ல முடியாத துன்பத்தையும் இழப்பையும் சந்தித்து வந்திருக்கின்றனர். இன்னும் வருகின்றனர். உயிரழிவு உடமையழிவு என அவர்கள் அதிக விலையை தமது வாழ்வைப் பாதுகாக்க செலுத்தியிருக்கின்றனர்.

நீண்ட காலமாக கிழக்கு மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளாக அரசின் சிங்கள குடியேற்றம் இராணுவமயமாக்கம் ஆயுத அடக்குமுறை மற்றும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையேயான முரண்பாடுகள் மோசமாகி வருதல் போன்ற பிரச்சினைகளும் தொடர்ந்து நீடிக்கின்றன. இந்த விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படி நியாயமான அரசியல் தீர்வு காணப்படுவது அவசியமாகும். இவற்றிற்கு நீண்ட கால நோக்கில் அரசியல் தீர்வொன்று காணப்படும் பொழுது தான் கிழக்கு மக்களின் வாழ்வில் நிரந்தர அமைதியையும் சமாதானத்தையம் மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் கொண்டுவர முடியும். தமிழ் முஸ்லிம் மக்களின் இதயபூர்வமான எதிர்பார்ப்பும் இதுதான்.

இத்தேர்தலினால் மாகாணசபை கிழக்கில் இயங்கத்தொடங்குவது ஒருபக்கமிருக்க நாடளாவிய ஜனநாயக சீர்திருத்தங்களுக்கும் நீண்டகால நோக்கிலான அரசியல் தீர்வொன்றை அடைவதற்குமான அரசியல் நடைமுறையொன்று சமகாலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கிழக்கு வாழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளைச் சிதைத்து மேலும் அடக்கு முறையையும் ஜனநாயக மறுப்பிற்கான சூழலையும் ஆயுதம் தரித்த தரப்போரின் கைகளை மேலோங்கச் செய்யவும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே இனப்பகைமையையும் போட்டா போட்டியையும் மேலும் கொழுந்து விட்டெரியச் செய்யவும் இத்தேர்தல் வழிவகுக்கும் அபாயம் காணப்படுவது குறித்து மக்களை எச்சரிக்க விரும்புகிறோம். மக்களை வுpழிப்போடு செயற்படும்படும்படி வேண்டுகிறோம்.

தேசத்தின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டும், நாட்டில் காணப்படும் அரசியல் போக்கினைக் கவனத்தில் கொண்டும் பார்க்கையில் நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்கள் மிகவும் பலமான ஐக்கிய முன்னணி ஒன்றைக் கட்டுவதன் மூலமே தீவிரமடைந்துவரும் சிங்கள அதி தீவிர தேசியவாதத்திற்கு பலமான சவாலாக செயற்பட முடியும.; இவ்வகையில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே கட்டப்படக்கூடிய பலமான முன்னணியொன்று சகல சிறுபான்மையினரையும் ஒன்று கூட்டி இலங்கை அரசிடம் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை கோரி நிற்கும் முயற்சியில் விரைவில் இறங்க வேண்டும். அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் ஓர் பலமான நிர்வாகம் தோற்றுவிக்கப்படுவது அவசியமானதே. அது தமிழ்-முஸ்லிம் இனங்களின் பலமான இணக்கத்தின் அடிப்படையிலான நிர்வாகமாக அமையுமாயின் இலங்கை அரசியலில் பல தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான அடித்தளமாக அமையும்.
---------------------------------------------------------------------------------------------
தமிழ் சமாதான ஒன்றியம் (Tamil Forum for Peace- TFP)
இலங்கை ஜனநாயக ஒன்றியம் (Sri Lanka Democracy Forum - SLDF)
இலங்கை இஸ்லாமிய அமைப்பு (Sri Lanka Islamic Forum- SLIF-UK)
தலித் மேம்பாட்டு முன்னணி(Social Development Organisation of Sri Lankan Dalits -SDOSLD) ஆகிய புலம் பெயர் நாட்டு ஸ்தாபனங்களால் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


- தமிழ் சமாதான ஒன்றியம்
04/05/2008

Tamil Forum for Peace (TFP)
27 Old Gloucester Street
LONDON WC1N 3XX
United Kingdom

tamilforumforpeace@gmail.com